தூத்துக்குடியில் துணிகரம்: எஸ்.ஐ-யை அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடி கைது!

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடியைப் போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்து சிறையில் அடைத்தனர்.

தூத்துக்குடி மேலவேலாயுதபுரத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் (23) என்பவர் மீது புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. ரவுடி பட்டியலில் உள்ள இவர், சம்பவத்தன்று தாளமுத்துநகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் புகுந்து, கையில் அரிவாளுடன் பொதுமக்களை மிரட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்துத் தகவல் அறிந்ததும், சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்ற பிரவீன்குமாரைப் பிடிக்க முயன்றபோது, அவர் ஆத்திரமடைந்து தான் வைத்திருந்த அரிவாளால் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜாவைத் தாக்க முயன்றார்.

உடனடியாகச் சுதாரித்துக் கொண்ட போலீசார், ரவுடி பிரவீன்குமாரைச் சாமர்த்தியமாகச் சுற்றி வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். விசாரணக்குப் பின் அவர் தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply