நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த சின்னத்துரை (வயது 18), கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாதி அடிப்படையிலான தாக்குதலுக்கு உள்ளானவர். தற்போது அவர் மீண்டும் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி, பல தரப்பிலிருந்து கண்டன குரல்கள் எழுந்துள்ளன. மேலும் சின்னத்துரையை தாக்கியவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர்.
தூய சவேரியார் கல்லூரியில் B.Com (Corporate Secretaryship) படித்து வரும் சின்னத்துரை, பாளையங்கோட்டை நோக்கி செல்வதாக தாயிடம் கூறி வீட்டை விட்டு கிளம்பியிருந்தார். மாலை 7.30 மணியளவில், அவரது தாயிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அழைத்துப் பேசினார். சின்னத்துரை, மாவட்ட அறிவியல் மையம் அருகே அடையாளம் தெரியாத நால்வரால் தாக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வலது கையில் காயமடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை முடித்து அவர் சொந்த விருப்பத்தின் பேரில் வீடு திரும்பினார்.
விசாரணையின் போது, சின்னத்துரை, இன்ஸ்டாகிராம் மூலமாக பழகிய நண்பரின் அழைப்பின் பேரில் கொக்கிரகுளம் அருகே சென்றதாகவும், அங்கு பணம் கேட்ட நால்வர் தாக்கி, அவரிடம் இருந்த செல்போனை பறித்துச் சென்றதாகவும் கூறியுள்ளார். ஆனால், இன்ஸ்டாகிராம் கணக்கின் விவரங்களை அவர் கூற மறந்துவிட்டதாக தெரிவித்ததாக போலீசார் கூறுகின்றனர். பழைய தாக்குதலுடன் தற்போதைய சம்பவத்திற்கு தொடர்பு இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேற்படி சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினர்.