தூத்துக்குடி,நவம்பர்-22,
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், பலத்த மழை கொட்டி வருவதால் நகரின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே லேசான மழை பெய்து வந்த நிலையில், இன்று காலை முதல் விட்டு விட்டு பல மணி நேரமாகத் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நகரின் தாழ்வானப் பகுதிகளிலும், முக்கிய சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் தண்ணீரில் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.தொடர் மழையின் காரணமாக, பொதுமக்கள் அன்றாடத் தேவைகளுக்காகவும், வேலைக்குச் செல்வதற்கும் மிகுந்த சிரமப்படுகின்றனர். வியாபார நிறுவனங்களிலும் மக்கள் கூட்டம் குறைந்து காணப்படுகிறது.தொடர்ந்து பெய்து வரும் மழையினால் நகரில் மேலும் நீர் தேங்குவதைத் தடுக்க, மாநகராட்சி நிர்வாகம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
