நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா: ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

திருநெல்வேலி டவுண் அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலின் புகழ்பெற்ற ஆனிப் பெருந்திருவிழா, வரும் ஜூன் 30, 2025 அன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கி, ஜூலை 8, 2025 அன்று தேரோட்டத்துடன் நிறைவுபெறவுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் இரா. சுகுமார், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்குவதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்:

காவல்துறை: திருநெல்வேலி நகரின் நான்கு ரத வீதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

போக்குவரத்துக் காவல்துறை: திருநெல்வேலி சந்திப்பிலிருந்து வரும் வாகனங்களை பாரதியார் தெரு, தெற்குமவுண்ட் ரோடு, மேலமவுண்ட் ரோடு, குற்றாலம் ரோடு, தொண்டர் நயினார் சன்னதி வழியாகத் திருப்பிவிட்டு, சுவாமி மற்றும் அம்பாள் வீதி உலாவுக்கு இடையூறின்றி தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

தீயணைப்புத்துறை: ஒரு தீயணைப்பு ஊர்தி மற்றும் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

அடிப்படை வசதிகள் மற்றும் பராமரிப்பு:

மின்சார வாரியம்: திருவிழாக் காலத்தில் எவ்வித மின் தடங்கலும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், மின் இணைப்பு வயர்கள் மற்றும் மின்சாரப் பெட்டிகள் தேர் உலாவுக்கு இடையூறாக இல்லாதபடி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாநகராட்சி: நான்கு ரத வீதிகளிலும் தேர்கள் ஓடும் வகையில் தரமான சாலைகளை அமைக்க வேண்டும். பக்தர்களுக்கு குடிநீர், சுகாதார வசதிகள், கிருமி நாசினிகள் தெளித்தல், கழிவு மற்றும் பூக்களை அப்புறப்படுத்தி தூய்மையாகப் பராமரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

நெடுஞ்சாலைத்துறை: நெல்லை டவுண் ஆர்ச்சிலிருந்து சுவாமி நெல்லையப்பர் திருக்கோயில் வரையிலான சாலை மற்றும் நான்கு ரத வீதிகளில் உள்ள பழுதடைந்த சாலைகளை உடனடியாகச் செப்பனிட வேண்டும்.

போக்குவரத்து மற்றும் மருத்துவ வசதிகள்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்: லட்சக்கணக்கான பக்தர்கள் வருகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுகாதாரத்துறை: தேவையான மருத்துவ உபகரணங்கள், மருந்து, மாத்திரைகள், ஆம்புலன்ஸ் வாகனத்துடன் கூடிய மருத்துவ முகாம்களை ஏற்படுத்த வேண்டும்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, மாநகராட்சி ஆணையாளர் என்.ஓ.சுகபுத்ரா, காவல்துறை துணை ஆணையாளர் பிரசன்னகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் கண்ணா கருப்பையா, வட்டார போக்குவரத்து அலுவலர் என்.ஆர்.சரவணன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply