பொன்மலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேல கல்கண்டார் கோட்டை மூகாம்பிகை நகரைச் சேர்ந்த அலெக்ஸ்-விக்டோரியா தம்பதியர் கடன் பிரச்சனை காரணமாக கணவன் மனைவி இருவரும் தூக்கு மாட்டிக்கொண்டும், அவரது இரு பெண் பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்தும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்த விபரம் வருமாறு;
திருவெறும்பூர் அருகே உள்ள மேலக்கல்கண்டார் கோட்டை மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் ஜோசப். இவரது மகன் அலெக்ஸ் 42. இவரது மனைவி விக்டோரியா, மகள்கள் ஆராதனா, ஆலியா ஆகிய நான்கு பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில் இன்று காலை வீடு திறக்கப்படாமல் இருந்ததை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், ஏன் இவ்வளவு நேரம் ஆகியும் வீடு திறக்கவில்லை என போய் பார்த்தபோது வீட்டின் கதவு உள்பக்கம் தாளிடப்பட்டிருந்ததாகவும், பின்னர், அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து வீட்டில் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அலெக்ஸ் மற்றும் விக்டோரியா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளனர். படுக்கையறையில் குழந்தைகள் ஆராதனா, ஆழியா ஆகியோர் இருவரும் மர்மமான முறையில் இறந்த நிலையில் கிடந்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக பொன்மலை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்மலை உதவி ஆணையர் சதீஷ்குமார், காவல் ஆய்வாளர் வெற்றிவேல் அடங்கிய போலீசார் நான்கு பேரின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தபோது, முதற்கட்ட விசாரணையில், அலெக்ஸ் ஜவுளி வியாபாரம் செய்து வந்ததாகவும், அதில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இவரது மனைவி விக்டோரியா (35) இவர் ரயில்வே ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர்களது மகள்கள் ஆராதனா (9 )இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துவந்தார். ஆலியா (3) என இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில், அலெக்ஸ்க்கு ஜவுளி வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடன் ஏற்பட்டுள்ளது.
மேலும் தஞ்சையில் உள்ள அவரது அம்மாவிற்கு கேன்சர் நோயிற்காக மருத்துவமனை செலவு செய்ததில் ரூ.3 லட்சம் வரை கடன் ஏற்பட்டதாகவும், அதேபோல் அவரது தம்பிக்கு தொழில் செய்வதற்காக கடன் வாங்கி கொடுத்ததை திரும்ப கொடுக்க முடியாமல் போனதாகவும், இப்படி அடுத்தடுத்து கடன் சுமை அதிகரித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மேல கல்கண்டார் கோட்டை மகாலட்சுமி நகர் பகுதியில் அலெக்ஸ் புதிதாக ஒரு வீடு கட்ட கடன் வாங்கி இருந்ததாகவும், அதற்குரிய கடன் தவணைத் தொகையை விக்டோரியாவின் தாயாருக்கு வந்த பென்சன் தொகையில் இருந்து கொடுத்து வந்ததாகவும்.
இந்தநிலையில் விக்டோரியாவின் தாயாரும் சமீபத்தில் இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், அந்த பென்ஷன் தொகை கிடைக்காமல் போனதால் வீடு வாங்கியதுக்கான கடன் தொகையையும் கட்ட முடியாமல் போனதால் கடன் காரர்கள் நெருக்கடி தம்பதியருக்கு அதிகரித்துள்ளது இதனால் அலெக்ஸ் மற்றும் விக்டோரியாவிற்கு மன உலச்சல் ஏற்பட்டுள்ளதோடு கடன் சுமை அதிகரித்ததால் மனம் வெறுத்து போனதுடன் அலெக்ஸும் விக்டோரியாகவும் தனது இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கலந்து கொடுத்துகொலை செய்துவிட்டு, தாங்களும் தற்கொலை செய்து கொள்வதென முடிவு செய்துள்ளனர்.
அதன் அடிப்படையில் குழந்தைகளுக்கு விஷத்தை கொடுத்து கொலை செய்ததோடு, அலெக்ஸ் விக்டோரியாவும் தூக்கிட்டு வீட்டிற்குள்ளேயே தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடன் சுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.