சித்தர் பீடத்தில் தை அமாவாசை திருவிழா நடைபெற்றது.
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவர், ஸ்ரீவராஹி அம்மன், குருமகாலிங்கஸ்வரர் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர். தை அமாவாசை திருவிழா மஹா யாக வழிபாடுகள் சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது.
பக்தர்களின் வாழ்வில் கடன் தொல்லைகள்-எதிரி தொல்லைகள் நீங்கிடவும், செல்வவளம்-தொழில்வளம் பெருகிடவும், நாடு முழுவதும் அமைதி நிலவிடவும், இயற்கை பேரிடர்கள் இல்லாத நிலை வேண்டியும் மஹா யாகத்திற்கான வழிபாடுகள் கணபதி, நவக்கிரக ஹோமம், பிரத்தியங்கிரா, காலபைரவர் ஹோமத்துடன் தொடங்கியது. மதியம் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 64வகையான அபிஷேகமும், மஹா தீபாராதனையும் நடந்தது. காலை முதல் மாலை வரை தொடர்ந்து பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டது.
இவ்வழிபாட்டில், வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் திரளாக பங்கேற்று வழிபட்டு சுவாமியின் அருள் பெற்றுச்சென்றனர்.தை அமாவாசைக்கான ஏற்பாடுகளை வழிபாட்டுக் குழுவினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

