கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27 அன்று தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து விஜய் மற்றும் தவெக தொண்டர்கள் மீது பல்வேறு விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் விஜய் கடந்த இரு நாட்களாக வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் தெரிவித்து வரும் சூழலில், தவெக துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன் தனது ‘X’ பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில், “வேதனையில் இருந்து மீள முடியவில்லை. உறவுகளை இழந்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களின் வலியில் பங்கெடுத்துக்கொள்வதாலேயே இந்த அமைதி நிலவுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “இந்த அமைதியைப் பயன்படுத்தி என் மீது பரப்பப்படும் அரசியல் அவதூறுகளை, வதந்திகளை, வன்மங்களை, வெறுப்பை நம்ப வேண்டாம்” என்று மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
“அத்தனை கல்லடிகளையும் நான் தாங்கத்தான் வேண்டும். பாதிக்கப்பட்டவர்களோடு வாழ்நாள் முழுக்கப் பயணிப்பதும் அவர்களுக்கு நீதி பெற்றுத் தருவதுமே 41 உயிர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி. அதில் கவனம் செலுத்துவோம்” என்றும் ராஜ்மோகன் தனது பதிவில் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இதன்மூலம், கரூர் துயரச் சம்பவத்தைப் பயன்படுத்தி தவெக மீது பரப்பப்படும் அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு அவர் முதல் முறையாகப் பகிரங்கமாக பதிலளித்துள்ளார்.