Site icon thoothukudipeople.com

ஆழ்வார்திருநகரி பகுதியில் ஆட்சியர் ஆய்வு-வளர்ச்சித் திட்டப் பணிகள் விரைவுபடுத்துபடும்:மக்கள் எதிர்பார்ப்பு!

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கேம்பலாபாத் ஊராட்சிக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், அங்கு “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் மூன்று பயனாளிகளுக்கு வீடுகள் கட்டப்பட்டு வரும் பணிகளை நேரில் பார்வையிட்டார். இத்திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவு வழங்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பயனாளிகளுக்கு தரமான மற்றும் உரிய காலக்கெடுவுக்குள் வீடுகள் கட்டி முடிக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் ஆட்சியர் இந்த ஆய்வை மேற்கொண்டார். கட்டுமானப் பணிகளின் தரம், பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் பணிகளின் முன்னேற்றம் குறித்து அவர் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு: கேம்பலாபாத் ஊராட்சியில் ஆய்வை முடித்த பின்னர், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். அலுவலகத்தின் செயல்பாடுகள், கோப்புகள் பராமரிப்பு மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து அவர் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் பணிகளின் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்றம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் (BDOs) விரிவாக கேட்டறிந்தார்.

ஆட்சியர் இளம்பகவத்-தின்  திடீர் ஆய்வு, ஆழ்வார் திருநகரி பகுதியில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைவுபடுத்துவதோடு, திட்டங்களின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணர்வையும் அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version