தூத்துக்குடி,நவம்பர்-22,
வங்கக் கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உட்படத் தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தென் தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். காற்றின் வேகம் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீச வாய்ப்புள்ளதால், பாதுகாப்புக் கருதி மீனவர்கள் வரும் 25ஆம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

