Site icon thoothukudipeople.com

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் தமிழ் இலக்கியத் திருவிழா: வெற்றியாளர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி விருது வழங்கினார்!

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களைச் சிறப்பிக்கும் வகையில் ‘இலக்கியத் திருவிழா’ எழுச்சியுடன் நடைபெற்றது.

விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, குத்துவிளக்கேற்றி விழாவினைத் தொடங்கி வைத்தார். முன்னதாக, மறைந்த தமிழறிஞர்களான பாரதியார், வ.உ.சிதம்பரனார் மற்றும் கரிசல் இலக்கியத் தந்தை கி.ராஜநாராயணன் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கல்லூரி மாணவிகளின் வரவேற்புப் பாடலுடன் தொடங்கிய இந்நிகழ்வில், தமிழ் வளர்ச்சித் துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு தமிழறிஞர்கள் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்புரையாற்றிய மேயர் ஜெகன் பெரியசாமி, தமிழ் மொழியின் தொன்மையையும் அதைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார். “முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தி தமிழைச் செம்மொழியாக்கப் பாடுபட்டார். இன்றும் இந்தி திணிப்பு போன்ற பல்வேறு மொழியியல் சவால்களை நாம் சந்தித்து வருகிறோம். ஜாதி, மதங்களைக் கடந்து நாம் அனைவரும் தமிழர்கள் என்பதைப் பொங்கல் திருநாள் போன்ற கொண்டாட்டங்கள் மூலம் நிரூபித்து வருகிறோம். எட்டயபுரம் பாரதி, செக்கிழுத்த செம்மல் வ.உ.சி மற்றும் கோவில்பட்டி கி.ரா போன்ற ஆளுமைகளின் பங்களிப்பை நாம் என்றும் மறக்கக்கூடாது. குறிப்பாக, கி.ரா அவர்களுக்குத் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அமைத்துப் பெருமைப்படுத்தப்பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், மாணவர்களிடையே உரையாற்றிய அவர், “கல்விதான் யாராலும் அசைக்க முடியாத மிகப்பெரிய சொத்து. வருங்கால இந்தியாவின் தூண்களாக விளங்கும் நீங்கள், அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்து உடல் நலத்தையும், மன தைரியத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். நேரத்தை பயனுள்ள முறையில் செலவிட மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா நூலகங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தினார். நிகழ்வின் நிறைவாக, மாவட்ட அளவில் தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மேயர் அவர்கள் சான்றிதழ்களையும், ஊக்கத்தொகையையும் வழங்கிப் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் வ.உ.சி-யின் வாரிசுகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Exit mobile version