விருதுநகரிலிருந்து திருச்செந்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தின் ஓட்டுநர், திடீரென மயக்கம் ஏற்பட்ட நிலையிலும், பேருந்தை சமயோசிதமாக நிறுத்தி 38 பயணிகளின் உயிரைக் காத்த நெகிழ்ச்சியான சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது.
நேற்று பிற்பகல் விருதுநகரில் இருந்து அரசுப் பேருந்தை இயக்கி வந்த ஓட்டுநர் லிங்கப்பாண்டி மற்றும் நடத்துநர் சிவகுமார் ஆகியோர், தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் வந்து பயணிகளை இறக்கிவிட்டனர். பின்னர், திருச்செந்தூருக்கு 38 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று மாலை 4:20 மணியளவில் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு திருச்செந்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
பேருந்து தூத்துக்குடி சத்யாநகர் நியோ டைடல் பார்க் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் லிங்கப்பாண்டிக்கு திடீரென மயக்கம் வருவது போல் இருந்துள்ளது. ஒரு கணம் கூட தாமதிக்காமல், அவர் உடனடியாக பேருந்தை சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்திவிட்டு ஸ்டியரிங்கில் மயங்கிச் சாய்ந்துள்ளார். இதனைப் பார்த்த நடத்துநர் சிவகுமார், உடனே ஆம்புலன்ஸ் மற்றும் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். பயணிகள் அனைவரும் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மயங்கிய ஓட்டுநர் லிங்கப்பாண்டி உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் அவர் இயல்பு நிலைக்குத் திரும்பினார். சரியான நேரத்தில் அவர் பேருந்தை நிறுத்தியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, பேருந்தில் இருந்த 38 பயணிகளும் பத்திரமாக உயிர் தப்பினர்.ஓட்டுநர் லிங்கப்பாண்டியின் செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.