தூத்துக்குடியில் டியூசன் சென்று கொண்டிருந்த மாணவர் மீது மற்றொரு வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அண்ணா நகர் 6-வது தெருவைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவரது மகன் அகமது யாவித் (14). இவர் தூத்துக்குடி ரெங்கநாதபுரத்தில் உள்ள ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயின்று வந்தார். இன்று காலை சுமார் 8:30 மணி அளவில், அகமது யாவித் தனது வீட்டிலிருந்து மின்சார பைக்கில் (Electric Bike) டியூசனுக்கு படிக்க சென்று கொண்டிருந்தார்.

அப்போது பண்டுகரை பக்கிள் ஓடை, பர்மா காலனி சாலையில் அவர் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மாணவனின் பைக் மீது மோதியுள்ளது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மாணவன் பலத்த காயமடைந்தார். விபத்தை ஏற்படுத்திய வாகனம் அங்கிருந்து நிறுத்தாமல் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.இதில் பலத்த காயமடைந்த பள்ளி மாணவர் அகமது யாவித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சமபவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனத்தைக் கண்டறிய, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
பெற்றோர்களே, தயவுசெய்து இதை கவனியுங்கள்:
❌ வாகனம் கொடுக்காதீர்கள்: 18 வயது பூர்த்தி அடையாத, ஓட்டுநர் உரிமம் இல்லாத பள்ளி மாணவர்களிடம் இருசக்கர வாகனங்களை (மின்சார பைக் உட்பட) எக்காரணம் கொண்டும் ஒப்படைக்காதீர்கள்.
⚖️ சட்டம் அறிவோம்: இது சட்டப்படி குற்றம் மட்டுமல்ல, அவர்களின் உயிருக்கே வினையாக முடிகிறது.
🚲 மாற்று வழி: பள்ளி அல்லது டியூசனுக்குச் செல்ல மிதிவண்டி அல்லது பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த பிள்ளைகளை ஊக்குவியுங்கள்.
“ஒரு கண நேர வசதி… ஆயுள் கால சோகமாக மாற வேண்டாம்.”
🙏 உங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு உங்கள் கையில்! இந்தச் செய்தியை அனைத்துப் பெற்றோர் குழுக்களிலும் பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.
